தீபங்கள் பேசும்

Monday, November 19, 2007

அம்முலு பூனை

இருள் கவிந்திருந்த இரவுப்பொழுதில் விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகளைத் தவிர நிறைந்து காணப்பட்ட மரங்கள் எல்லாம் புதுமழையில் நனைந்து புத்துணர்ச்சியோடு காற்று வீச்க்கொண்டிருந்தது.

எண்களாக இல்லாமல் வீடுகளின் பெயர்களாலே அடையாளம் காணப்படும் மரங்கள் அடர்ந்த பசுமை நகரம்.பெய்த மழையில் மின்சாரம் தடைபட்டிருக்க விளக்கு வெளிச்சத்தில் விழித்துக் கொண்டிருந்தது கோவில் தெரு பிருந்தாவனம் வீடு. பக்கத்துவீடு உறக்கத்திற்கு சென்றுவிட ஒருவிதமான கலவர முகத்தோடு கீதா! ஓயாத பூனை உருமல். முதன்முறையாய் இந்த அகால நேரத்தனிமை. இருளிலன் சூழலில் எந்த புதிய ஒலியும் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

ஏதோ சிந்தனையிலிருந்தவளை தொலைபேசி மணி அழைப்பு கலைத்தது.

கீதா! கணவனின் குரல்,
எப்ப வருவீங்க?
வழியெல்லாம் மழை, நான் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும், காத்திருக்காத!
நீ தூங்கிடுமா.
சரிங்க! ஏமாற்றமாகிப்போனது கீதாவிற்கு.

பயந்த சுபாவமான கீதாவிற்கு இந்த அனுபவம் புதிதாகவும் சிரமமாகவும் இருந்தது. விடாது பாடிய சுவாமி பாடல்கள் அவளுக்கு ஒரு தைரியியத்தை கொடுப்பதாக இருந்தது.

மாடி அறையிலிருந்து உர் உர் என உறுமல் சத்தம்! ஒரு மாதமாக வாசம் செய்யும் பூனையின் சத்தமது. இரவின் இருளும் தனிமையும் படபடப்பை அதிகரிக்க தானிருந்த அறையினை தாழிட்டு படுத்துக்கொண்டாள்.

புதிதாக இரண்டு பூனைகளை பிரசவித்திருந்த பூனை தூங்காது உறூமிக்கொண்டே இருந்தது. உறங்கிவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்களின் பூனைக்கு கீதாவின் மாடி வசதியாக விட்டது. பகலில் மாடிக்குப் போகும் போதும் கீதாவை பார்த்து உறூம, மாடிக்கு போவதையே தவிர்த்து வந்தாள் கீதா!. பூனை மீது பயம் என்றாலும் குட்டிப்பூனைகளை கண்டுவிட ஒரு ஆவல் அவளுக்குள்.

விடிந்ததும் ஜன்னல் வழியாக தாய்ப்பூனை வெளியே சென்று விட்டது. வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மாடிக்கு போனாள் கீதா. இரண்டு குட்டியும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தது. சாம்பல் வெள்ளை நிறத்தில் ஒன்றும் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருந்தன. தூரத்திலிருந்தே பார்த்தாள் அதுவும் தாய்ப்பூனையின் உறுமல் ஏதும் இல்லாத தைரியத்தில்.

எப்போதும் ஒரு மெல்லிய, இனிமையான உணர்வு ததும்பி இருக்கும்படி வைத்துக்கொண்டாள் அவள் வீட்டை. வீணையும், பாட்டும் தெரிந்திருந்தால், அந்த பகுதி குழந்தகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தாள். எப்போதும் இருபது பேருக்கு குறையாதிருக்கும் அவளது வகுப்பில்.
கண்டிப்பும் கனிவும் இருப்பதால் குழந்தைகளுக்கும் அவள் மேல் பிரியம். விளையாடி விட்டு அப்படியே வகுப்புக்கு வேர்வை வழிய வரும் பிள்ளைகளை தன்னருகே அழைத்து, சேலைத்தலைப்பால் துடைத்து விடுவாள். ஏதோ ஒரு திருப்தி கிடைப்பதாக உணர்வு அவளுக்கு இப்படிச் செய்யும் போதெல்லாம்.

மாடிக்குப் போகும் போதெல்லாம் சில நிமிடம் பூனைக்காக செலவளிக்க ஆரம்பித்துவிட்டாள். முதன் முதலாக குட்டிப்பூனை கண் திறந்து பார்க்கையில் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அருகில் போகாமல் தூரத்திலிருந்தே பூனையின் அசைவினை ரசித்து விட்டு போனாள். இந்த புது அனுபவம் அவளுக்கு மகிழ்வைத் தந்திருந்தது

ஒருநாள் தாய்ப்பூனை குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்கு போய்விட்டது. பிரசவம் பார்க்க மட்டும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு போல இந்த பூனை என்று நினைத்தவாறே வேலையில் ஆழ்ந்தாள். உறுமும் பூனை போய்விட்டதால் இனி பயமில்லை என்று மகிழ்ந்தாலும், அந்த குட்டி பூனைகளை பார்க்க முடியாது என்பது ஒரு விதமாய் அழுத்தியதாலோ என்னவோ சட்டென்று முகம் வாடிவிட்டது.

மாடிக்குப் போகும் பேதெல்லாம் பூனையிருந்த தடங்களின் மீது அவள் கண் படாதிருந்ததே இல்லை. மாதம் ஒன்று ஓடிவிட்டது. இரண்டு குட்டியில் ஒரு குட்டி காணமல் போய்விட்டது, சாம்பல் நிற குட்டி மட்டும் இருந்தது. ஏதோ சிறு குழந்தை சத்தம் போல் கேட்க கதவை திறந்து வந்து பார்த்தாள். குட்டி பூனை தனியாக வாசற்படியருகே நின்றது. அதன் சாந்தமான முகம் பூனைகள் குறித்தான அவள் அச்சத்தை நீக்குவதை போல இருந்தது. மிகவும் சிறியதாக கையளவே முகம் கொண்டிருந்த பூனைக்குட்டியை பார்த்ததுமே ஒரு சந்தோசம் அவளுக்குள் அது சன்ன குரலில் மியாவ் மியாவ் என சொல்ல மழலைச் சொல் கேட்டது போன்றே பூரிப்பு. சமயலறையிலிருந்து பால் கொண்டு வந்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்தாள். குட்டிப்பூனை அதை சமர்த்தாக குடித்தது.

இன்னிக்கு குட்டிப்பூனைக்கு பால் கொடுத்த்தேன். அப்படியே குடிச்சிட்டது. குழந்தை போல கீதா விவரிக்க புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான் அவள் கணவன்.

குட்டிப்பூனைக்கு இப்போது தினந்தோறும் பால் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பசியெடுத்தால் கதவருகே வந்து மியாவ் மியாவ் என சத்தம் கொடுக்கும். பூனையின் மொழி அவளுக்கு புரியத் தொடங்கிவிட்டது. பால் குடித்து பழகிவிட்ட குட்டிப்பூனை அவள் அருகே வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. குட்டிப்பூனையின் ரோமங்கள் அழகாக மெதுமெதுவென்று இருக்க அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டாள். வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு பூனையின் வாலருகே கையை கொண்டு போனாள். குட்டி எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாய் இருக்க ஒற்றை விரலால் வாலை நீவீ விட்டாள். மிக மிருதவான வால், இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருந்தது. குட்டிப்பூனை அவளின் பயம் போக்கி ஒரு நேசம் விதைத்திருந்தது. ஒரு வாரத்தில் குட்டிபூனையின் முதுகைத் தடவித்தரும் அளவிற்கு சிநேகம் வளர்ந்து விட்டது.

காலை டீயூசன் ஆரம்பிக்கும் முன் வாசலுக்கு வருவாள். அதே நேரம் சரியாக குட்டிப்பூனை புதிதாக பிறந்த இன்னொரு பூனையோடு வந்து விளையாட ஆரம்பித்துவிடும். ஆட்டம் முடிந்து களைப்பு வந்தவுடன் ஒரு பார்வை இவளைப்பார்த்து. அதன் பார்வையை புரிந்து கொண்டு அவளும் பால் ஊற்றிவிடுவாள். கொலுசு சத்தம் கேட்டவுடன் குட்டிப்பூனை ஓடி இவளருகே வர இவளுக்கோ பேரானந்தம், குட்டிப்பூனையோடு சேர்ந்து அவளுடைய வயது பின்னோக்கி போனது.

வீட்டுக்காரர்கள் பூனைக்கு அசைவ உணவு போட்டாலும் இப்போது பாலுண்ணுவது தினசரி நிகழ்வாகிப்போனது. டீயூசனுக்கு வந்த சிறுமி பூனையை லாவகமாக தூக்கி மடியில் வைத்து கொஞ்சி விளையாடியது இவளக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது, இவள் கண்களில் விரிந்த ஆச்சர்யத்தை பார்த்துவிட்டு, என்ன டீச்சர் பூனையை தூக்கணுமா என்று கேட்டாள்.

அவளுக்கு தூக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது, பூனையின் உடம்பு எப்படி இருக்கும், எலும்பு சதை எல்லாம் இவ்வளவு சின்னதா இருக்கே, அதத தூக்கினா வலிக்குமா, எப்படி பிடிக்கணும்னு தெரியாதே, துள்ளி ஓடிடுமா என ஏராளமாய் மனதிற்குள் ஓட, அவள் கைகளில் பூனையை கொடுத்தாள். இலவம் பஞ்சு போல மேனி, பொசுபொசுவென்று அழகிய ரோமம், மெல்ல தடவிப்பார்க்கையில் தட்டுப்படும் எலும்பு, முதன் முதலாய் பூனையை தூக்கி வைத்திருப்பது அவளுக்கு மகிழ்வையும், வீரத்தையும் தந்தது போல கலவையான உணர்வைத் தந்தது. அம்முலு என்றாள். வெடுக்கென்று குட்டீப்பூனை திரும்பி பார்த்தது. அம்முலு அம்முலு என்று ஒவ்வொரு முறை கூப்பிடும் போது திரும்பி பார்த்தது அவளிடம் ஓடி வந்தது.


வீட்டு வேலைக்கு வந்திருந்த பெண்ணிற்கு வீட்டு பின்புறத்திலுல்ள முருங்கை மரத்திரலிருந்து ஐந்தாறு முருங்கைகாய்களை பறித்து தந்தாள். நீண்ட நாட்களாக கீதாவிடம் வம்பளக்க வாய்ப்பு தேடியவளுக்கு இதைப் பார்த்துகொண்டிருந்த வீட்டுகாரி எப்படி நீ அவளுக்கு தரலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டாள், அதிர்ந்து பேசிடாதா கீதாவிற்கு குரலுயர்த்தி பேசும் வீட்டுக்காரியின் பேச்சு கோவத்தை ஏற்படுத்திவிட்டது. அவளுக்கு தந்ததால் என்ன என்றூ திருப்பிக்கேட்க, பாட்டு சொல்லி கொடுக்கிற டீச்சருக்கு எப்படி நடந்துகிணம்னு தெரியலையே என கண்டபடி பொரிந்து தள்ளிவிட தாளத வேதனை. மூதாதையர்களும் அவளது வசைபாடலில் தப்பவில்லை,

வீட்டுக்காரியின் ஆவேச பேச்சு கீதாவுக்குள் ரணத்தை ஏற்படுத்தி விட்டது. பத்து வருசமா இதே வீட்டில் இருந்தாலும் எந்த சச்சரவுக்குள்ளும் தலையிடாத தனக்கு நேர்ந்ததை எண்ணி வேதனையில் அமிழ்ந்து போனாள்.

மறுநாள் காலை டீயூசன் சீக்கிரம் ஆரம்பித்துவிட அம்முலு வாசலைச் சுத்தி வந்து எட்டிப்பார்த்தது, உள்ளே கீதா பாடம் நடத்திக்கொண்டிருக்க வாசலில் படுத்துகொண்டு காத்திருந்தது அவள் வருகைக்காக. எட்டு வருடங்களாக அருகருகே குடியிருந்தும் தன்னை புரிந்து கொள்ளத வீட்டுக்காரிக்கும், பிறந்து கொஞ்ச நாளே ஆனாலும் வகுப்பெடுப்பது தெரிந்து முழுமையாக இரண்டு மணி நேரம் வகுப்பு முடியும் வரை சத்தம் ஏதும் கொடுக்காமல் காத்திருந்த அம்முலு அவளுக்குள் ஏராளமான செய்திகளை சொல்லியாதாக உணர்ந்தாள்.

எந்த சச்சரவுகளும் இல்லாதது போலவே கீதாவின் காலைச்சுற்றிக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது அம்முலு பூனை!
posted by முத்துகுமரன் at 4:20 AM 1 comments

Sunday, July 10, 2005

தீபங்கள் பேசும்

தீபங்கள் பேசும்

1.
களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்..

2.
கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்

3.
பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?

4.
உயிரைக் கொடுத்து
உயிரை எடுப்பாய்.
தெரிந்தே காத்திருக்கிறேன்
உன் பார்வைக்காக

5.
கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது

6.
ஆனந்தமாயிருப்பேன்
உன் நினைவுகளால்
உணர்வுகள் நிறைந்தால்..
எனக்கோ
இயக்கமே நின்றல்லவாபோகிறது!

விழியின் ஓரவீச்சிலே
பிரபஞ்ச இடைவெளி
எனக்குள்.
உன் விழித் தடைகள
தாண்ட முடியாத
என் நேசம்
இதயத்துள் கரைவது
எப்போதோ?

மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.

பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்

நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்

7.
உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??

8.
பூங்காவில் சிதறிக் கிடந்த
பூக்களை அள்ளி எறிந்தேன்
நட்சத்திரங்களானது
வானில்

பரணில் கிடந்த ஊஞ்சல்
உடைந்த கண்ணாடி,
பாடாத வானொலி
கசங்கிய கவிதைக் காகிதங்கள்
தேடித் தேடி ரசிக்கிறேன்

உரக்க குரலெழுப்பி பாடுகிறேன்
தெறித்து ஓடும்
குயில் கூட்டத்தையும்
கவனிக்காமல்

தந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு
தாயின் கழுத்தில் பின்னிக் கொண்டு
தங்கையின் கன்னம் கிள்ளிக்கொண்டு
கண்ணாடி முன் நாணிக் கொள்கிறேன்

எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம்

உன் பிரியத்தை
சொன்ன
கணப்பொழுதிலிருந்துதான்.........

9.
நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....

10.
விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!

11.
நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,

12.
ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..

13.
தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்

முறைத்தவேறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!

14.
பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....

15.
கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்

மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல

ம்ம்ம் ம்ம்ம்
எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்...

16.
சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்
கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன

கரடி பொம்மை.....

17.
என்னைப் பார்த்தபடியே
படியிறங்க
தவறி விழுந்தாய்.
பதட்டத்தோடு கை கொடுக்க
சட்டையைப் பற்றி
கண்களில் முத்தமிட்டாய்
என்ன செய்ய
இன்றும் வெற்றி
உனக்குத்தான்........

18.
மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து
இதழ் பிரிக்காமலே
பேசிக் கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாகி..

19.

விரல் தொடக்கூட அனுமதிக்காத
நீ -
சுகமற்று கிடந்த என்னை
தோளோடு சாய்த்துக்கொண்ட வேளையில்
என்னைத் தழுவிய மூச்சுக்காற்றில்
பரிதவிப்போடு துடித்த
அன்பில் இளகிப் போன
இக்கணம் போல்
என்றும்
இருந்திடக் கூடாதா!!

20.
உள்ளே செல்லத் தடுக்கும்
கூச்சத்தால்
கல்லூரி வாசலிலே
காத்திருக்கிறேன.
பார்வை கண்டு
என்னருகே நீ வர
நலம் விசாரிக்கும்
உன் தோழிகளோடும்
பொறுமையாய் பேசுகிறேன்
ஆண்டவன் வரம் கொடுத்தாலும்
இந்தப் பூசாரிகள்....என
உள்ளுக்குள்
முணகிக் கொண்டே

21.
துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு
கை பற்றி இழுத்து
ஓர் இருக்கை ஊஞ்சலில்
மடியில் வைத்து
கூந்தல் விலக்கி
காது கடித்து
உதட்டோடு
உயிர் சேர்க்க
கணா கானண்கிறேன்.

அணைத்தால்
சூரியன் பார்க்கும்
பனியின் ஆசையென
அறியாமல்

22.
பேசிக்கொண்டே
உன் கைப்பையிலிருக்கும்
கைக்குட்டை,
சின்னப் பொட்டுகள்,
வண்ணத் தோடுகள்,
கொண்டை ஊசிகள்,
சாமி படங்கள் நடுவே
பிறந்த நாள் பரிசை
ஒளித்ததைக் கண்டு சிரிக்கிறது
என் முகம் பார்த்தாலும்
உன்னைக் காட்டிய
கண்ணாடி.....

23.
என் மேல் கோபம்
பேச மாட்டேன்,
பிடிக்கவில்லை,
போகிறேன்,
கடைசி சந்திப்பிது-
ஒட்டுக் கேட்டவர்கள்
ஆறுதல் சொல்லுகிறார்கள்
எதிர்பதங்களே
அருஞ்சொற்பொருளாகும்
நம் கூட்டின்
அகராதி தெரியாமல்...

24.
ஒதுங்கிப் போகும்
என் தம்பியின் கூச்சம் கலைத்து
அன்பைப் பொழிகிறாய்
ஆகாயமாய்
கூந்தலை உன்னிடம் தந்து
மடியில் உறங்கும் தங்கையிடம்
பங்கு கேட்கையில்
அவன் காதத் திருகியும்
சிரிக்கையில்தான் கண்டேன்
உனக்குள் இருக்கும்
தாயை.......

25.உ‎ன்னை இன்னொரு மகளெ‎ன்ற
என் பெற்றோரும் திகைக்கிறார்கள்
தாலி பொருத்தம் இல்லா
நட்சத்திரக் குறிப்பால்...

நா‎ன் இல்லாமலே
உனக்கு தண்டனையாவதா?
காலத்திற்கும் சுமையாக ‏இருப்பதா?
நேசத்ததற்காக ‏இருளைத் தருவதா?

பதிலில்லா கேள்விகள்
தைக்க‎
வளர்ந்த சூழலி‎‎ன்
நம்பிக்கை சுழலில்
நேசத்தி‎ன் ழத்தில்
சிக்கி தத்தளிக்கிறது
மனம்.

பிரிவி‎ன் வலிகளை
தாங்கிடுவாய் எ‎ன்றே
வேறொருவனை
என வாயெடுக்க
அதிராமல் கேட்டாய்.
நா‎ன் பிணமாய்
வாழ்வதுதான்
உன் விருப்பமா?
நா‎ன் உறைந்தே போனேன்

26.
உன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு
போய் விட
எனக்கு சுவாசமே
சிரமமாகிப்போனது.
உன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே
துயரமேதும் நேர்ந்திடுமோ என்ற
அச்சத் திரையை
உதறமுடியாமல்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீள்கிறது
இந்த இரவும்
என் தவிப்பும்

27.
கனவில்
திருமணமண்டபம்,
எங்கும் ஆரவார சத்தம்

என் உறவுகள் மனம் கலங்கி
போலிப் புன்‎னகை செய்கிறது,
ஆறுதல் சோல்ல என்னை
தேடி அலையும் கண்களோடு,

நானும் நுழைகிறே‎ன்.
தளர்ந்தே நடந்தேன்.
ஒவ்வொரு நொடியும்
மனவலியாய்
என்னை சுற்றி கடக்கிறது..

சடங்குகள் ஆரம்பிக்கி‎ன்‎றன.
நெஞ்சம் நெருப்பாய் எரிய
சாட்சியாய் நிற்கிறே‎ன்.
கண்‎ணீர் மறைக்க
முய‎ன்று முடியாமல்
கைகுட்டையால் மறைத்து
அலைகிறேன் அங்குமிங்கும்...

வெறித்து வெறித்து பார்க்கிறே‎ன்
அதிசியம் எதுவும் நிகழாதா
என்ற ஏக்கத்துடன்...

‏இன்னும் சிறிது நொடியில்
திருமணம் முடியப்போகிறது...
அட்சதையோடு நிற்கிறே‎ன்
நொறுங்கிபோ‎ன பூமியி‎ன் மேல்

தாலியும் எடுத்தாகிவிட்டது‏.
கட்டிய காட்சி கண்டு
ச‎ன்னமாய் ஒரு பெருமூச்சு.
அம்மா-அப்பா!!
மணப்பெண்ணாய்
வேறொருவள்

28.

தனித்தனி
நேசம் நமக்கில்லை
நிருபித்த உ‎ன்முன்
சிறுமை உணர்வில்
நெஞ்சம் குறுகுறுக்க
முகம் பார்க்க முகமில்லாமல்
ச‎ன்னல் கம்பிகளில் புதைந்திருந்தே‎ன்

கை பற்றி அருகே
அமரவைக்க
மெளனம் உடைத்து
உன் உள்ளங்கால்களை
நனைக்கிறேன்.
க‎ன்னம் பிடித்து
நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
எ‎ன் கறைகள்

29.
உடைபடாத நம் உள்ளங்கள்
சொற்களாய் உதடுகளிடையே
உடைபடாமல் வெளிவர
நடக்குதிங்கொரு
மெளனப் போராட்டம்....

வலி தந்த இறுக்கம் கலைக்க
சில தூரம் நடந்த வேளையில்
வலுத்துப் பெய்த
மழையிலும்
தொடர்கிறது நமது பயணம்
விரல் கோர்த்து
நனைந்தவாறே

30.
படபடப்போடு என்
சமையலெப்படியென
கேட்க
ஒரு துளி உப்பு
கூடிவிட்டதென்றேன்.
புடவைக்குள் மறைத்த
கொப்பளங்களை
பார்த்தவாறே

31.
உறவினர்கள்தான் என்றாலும்
தலை குனிந்த வந்து
நாணத்தோடு
வணக்கம் சொல்லி
ஓரக்கண்ணால்
என்னைக் காணாது
தவிக்கிறாய்.

முட்டிக் கிளம்பிய
கண்ணீர் துடைத்து
நீ கதவடைத்துக் கொண்ட
உன் அறையில்
நானிருந்தேன்
உன் புகைப்படதோடு
பேசிக் கொண்டு

32.

நெத்தியில் பொட்டு வைத்து,
தேங்காய் உருட்டி விளையாடி
தலையில் அப்பளம் உடைத்து
பொம்மையைப் போட்டு தாலட்டி
மோதரத்திற்க்காக
பானைக்குள் சடுகுடு என
நம் திருமணத்திலும்
வழக்கமான சடங்குகள்...

எல்லோரும் களைத்து ஓய்ந்துவிட்ட தருணத்தில்
என்னருகே அமர்ந்து
சுண்டுவிரலோடு
பின்னிக் கொண்டு
தோளில் சாய்ந்துகொள்ள
என் காதல் முத்தங்கள்
பனிமழையாய்
உன் உச்சந்தலையில்

33.திருமணத்துக்கு பி‎ன்
‏முதல் ஊடல்
நீண்ட தாமதத்திற்காக,
எப்போதும் வீழ்த்தும்
எதிர் எதிர் ஆயுதங்கள்...
மொழி திறக்கா
மெளனம்
இமை சுருக்கி
எ‎ன்‎னை உருக்கும்
விழிகள்...

தலையோடு தலை முட்டி
‏இமையோடு இதழ் உரச
சொ‎ன்னாய் கவிதை..
சுமக்கிறே‎ன்
மடியிலும்,வயிற்றிலும்
கணக்காத
பிள்ளைகளிரண்டு

34.
பண்டிகை நாள்
மேகக் கூந்தல் விரித்து
சாம்பிராணி புகையிட்டு
சிறுக்கணிக்கியால்
சிக்கெடுத்து,
ஒற்றைச் சடை பி‎ன்னி
கொத்து மல்லிகை
அள்ளி வைத்தே‎ன்...

க‎ன்னம் பிடித்து
புருவமிடையே
பூத்திருந்த
வேர்வை பூக்களை
குங்குமம் சிதறாமல்
உலர்த்துகிறே‎ன்

எ‎ன் வாசத்தில் தெரிந்த
பசியறிந்து
நீ ஊட்டிய
பத்திய சாப்பாட்டி‎‎ன்
பருக்கைகள் போல்
அமுதுண்டதில்லை
இதுவரை

35.
ஒருவருக்கொருவர்
குழந்தையாய்
இன்பத்தி‎ன் உச்சத்தில்
கழிகிறது நாட்கள் ...

ஈருயிர் இன்பத்தை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலற
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
‏இரு தவிப்பில்
காத்திருக்கிறே‎ன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,

அருகிலமர்ந்து
உ‎ன் தாய்மைச் சூட்டை
உள்வா‎ங்கி
‏நம் செல்லத்தி‎ன்
பிஞ்சுக்கரத்தோடு
உ‎ன்னையும்
இறுக பற்றுகிறே‎ன்
மெலிதாய் நீ சிரிக்க
எனக்குள்
மழை

36.
இருவரின் நேசமும்
விகிதங்களி‎ன்‎றி
நம் குழந்தைக்குள்....
சி‎ன்ன சின்ன அசைவுகளுக்காக
ஆனந்த கூத்தாட்டம்..

முத்துப்பல் தெரிய சிரிக்க ..
அள்ளி நீ கொஞ்சிடும் நேரம்
.---ங்கே ---ங்கே
---ம்மா ----ம்ம்மா என
‏இதழ் பிரிகையில்
இதயங்களில்
குளிர்ச்சி..

தவழ்வதை ரசித்திருக்க
வடியும் எச்சிலை
ஓடிப்போய் துடைக்கிறாய்
எங்கே வழுக்கிடுமோ எ‎ன்று.

சுகமாய் சுமந்து
நிலவை காட்டி
நானும் பிள்ளையாகிறே‎‎ன்
நீ ஊட்ட போகும்
பிள்ளைச்சோற்றின்
கடைசி வாய்க்காக

37.
எச்சில் வடிய
உறங்கிக் கொண்டிருப்பே‎ன்.
சேலையால் துடைத்துவிட்டு
பழிப்பு காட்டுவாய் ..

கள்ளனாய் கண்விழித்து
கை பற்ற நினைத்தால்
கூந்தலி‎ன் ஈரம் தெளித்து
நழுவிடுவாய்.
கலங்கிய வேளைகளில்
வாரியணைத்து
நேசமாய் தலை கோதி
உச்சியில் இதழ் பதிப்பாய்
கண்கள் சொருக
நா‎ன்
மரணம் விரும்பும்
கணங்கள் .

என்னுள் எல்லாமும் ஆ‎ன
உ‎‎ன் உயிரை முகர்ந்து
உறக்கம் கலைக்காமல்
சொடுக்கெடுத்து,
விரல்களில்
மருதாணி வைத்தே‎ன்
விடியலில் சிவப்பாய்
என் முகம்

38.
நம்மிலும் சில நரைமுடிகள்..
விழிகளும்,மனங்களும்
உணர்ந்து கொள்வதால்
வார்த்தைகளாய் ‏
பேசுவதில்லை ..

இயந்திரத்தன தேடல்
முடித்த
ஓய்வெனும்
இளவேனிற்கால..
ஞாயிறு மாலையில்
‏உ‎ன்னை தோளில்
சாய்த்து கொண்டு
பழைய கவிதைகள் சொல்ல
சிரிக்கிறாய்..

மயக்கம் தீரலியா அப்பாவுக்கு!!
நடுவில் அமர்ந்த
மகளி‎ன் க‎ன்னம் வருடி
சொன்னேன்
எங்களுக்கு நீ‏
செல்ல பிள்ளை .
அவளுக்கு நா‎ன்தா‎ன்
முதல் பிள்ளை

39.
உ‎ன்னுட‎ன் வாழ்ந்த
ஒவ்வொரு கணத்திலும்
வேர்களை பிடித்திருந்த நிலமாய்
உயிரோடு கலந்திருந்தாய்.
உதிரும் போதெல்லாம்
மறுபடி மறுபடி
முளைக்க செய்தாய்...

உடல் பிரியும் மு‎ன்
ஏதேதோ பேச
நினைக்கிறே‎ன்.
எதுவுமே பேசமல்
உனக்காக காத்திருப்பேன்..
அதுவரை காத்து ‘இருப்பேன்’
கண்களாலே சொல்லி
உன் மடியிலே
எ‎ன்
எழும்பாத் துயில்

40.

உன் திருமணம் முடியும்வரை
தவறாகவே எண்ணியிருந்தேன்
காதலென்னவென்பதை
கனவுகளின் விருப்பத்தை
உடல்களின் சேர்க்கையை
எல்லை என்றிருந்ததையே
காதலென்றிருந்தேன்..

விலகியும்
நேசம் மாறாது
எதிர்பார்ப்புகளற்று
இன்று
உன் மீதிருப்பது
கூட
posted by முத்துகுமரன் at 8:04 AM 20 comments